Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியா பைத்தியகார நாடு...?

      ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக சொல்வார்கள்.  அழிவை பற்றி அக்கறை இல்லாமல் தனது ஆனந்தத்தை மட்டுமே பேணி பாதுகாக்கும் மனிதரை இப்படி சொல்வது வழக்கம்.  ஆனால் இன்றைய தலைவர்கள் பிடில் வாசிப்பதையெல்லாம் விட்டுவிட்டு அதை விட அதிகமான குரூரங்களில் ஈடுபட ஆரமித்துவிட்டார்கள்.  இதை இன்னும் விளக்கி சொல்ல வேண்டுமென்றால் சொந்த மகனை கழுத்தறுத்து வழியும் ரத்தத்தை மது கோப்பையில் பிடித்து ஆசை காதலிக்கு ஊட்டுவது போல என்றும் சொல்லலாம்.

  அமெக்க அதிபர் இந்தியா வருகிறார் இந்தியா வளரும் நாடு அல்ல வளர்ந்த நாடு என பட்டையம் தருகிறார் இன்னும் பல நாடுகளில் இருந்து வருகை தரும் தலைவர்கள் இந்தியா புத்துயிர் பெற்று விட்டது, வளமையோடு எழுந்து நிற்கிறது என்று பட்டு கம்பளத்தில் நின்று பாராட்டு உரை படித்து விட்டு போகிறார்கள்.  சராசரி இந்தியன் ஒழுகும் ஓட்டை குடிசையில் ஒடிந்த கட்டிலில் உட்கார்ந்து இலவச வண்ண தொலைக்காட்சியில் இவைகளை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுகிறான் .


  கந்து வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் எங்காவது ஒரு மூலையில் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறான்.  ஆடு மாடுகள் நிறைந்த பூமியில் உதட்டில் ஈரம் பட ஒரு துளி பால் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு பதினைந்து குழந்தைகள் பட்டினியால் துடிதுடித்து சாகிறார்கள்.  போதிய போஷாக்கு இல்லாததால் தினசரி ரத்த சோகையில் ஏராளமான தாய்மார்கள் பாதிப்படைந்து கொண்டே வருகிறார்கள் வயல்வெளியில் பயிரை விட களைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல பொருட்களின் தரத்தை விட விலைவாசி பன்மடங்கு உயர்ந்து கிடக்கிறது.  தொழிற்சாலை இயங்குவதற்கும் பயிர்களுக்கு உயிர் தண்ணி கொடுப்பதற்கும் குழந்தைகள் இரவில் படிப்பதற்கும் கூட மின்சாரம் கிடையாது.  வயிற்றுவலி என்று அரசு மருத்துவமனை சென்றால் அப்பாவி இந்தியன் காலரா நோயால் செத்து போகிறான்.

  உண்மையான நிலை இப்படி இருக்கும் போது கடல் கடந்து வந்த தலைவர்களும் இங்கே இருக்கும் உள்வீட்டு தலைவர்களும் இந்தியா முன்னேறிவிட்டது என்கிறார்களே.  ஒருவேளை இந்த தலைவர்களுக்கு எதாவது பார்வை கோளாறா?  அல்லது வறுமையை மட்டுமே பார்க்கும் நமக்கு எதாவது மூளை கோளாறா?  என்ற சந்தேகம் வலுவாகவே வருகிறது.


  1990-க்கு முன்பு இருந்த இந்தியாவோடு ஒப்பிட்டு பார்க்கும் போது தற்கால இந்தியா முன்னேறி இருப்பதாகவே தோன்றுகிறது.  மக்களின் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து உள்ளது.  நிலத்தின் விலை ஆகாயத்தை தொட்டாலும் வீட்டு மனைகளை வாங்கி போடுபவன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  ஆடம்பர பொருட்களான தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பொருட்கள், நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தி எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  ஐந்து ரூபாய் நோட்டுக்கு ஏங்கி கிடந்தவன் கூட ஐநூறு ரூபாய் நோட்டை சுலபமாக எடுத்து மாற்றுகிறான்.  இவையெல்லாம் முன்னேற்றத்தின் அடையாளம் தானே என்று நாம் நினைக்க தோன்றுகிறது.  தலைவர்கள் சொல்வது சரியாக இருக்க கூடுமோ என்று மயக்கமும் ஏற்படுகிறது.

  சிங்கப்பூர், ஜப்பான், அமெக்க நாடுகளை போல இந்தியாவும் பணக்கார நாடாக ஆகிவிட்டதாக நம்புவதில் சில சிக்கல்கள் உள்ளன.  சாலையோரங்களில் குடியிருப்போரின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை.  ஆயிரம் சட்டம் வந்தாலும், அனைவருக்கும் இலவச கல்வி என திட்டம் வந்தாலும் வேலைக்கு போகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை.  நெருக்கடி மிகுந்த பல சேரிப்பகுதிகளில் அடிப்படை சுகாதாரமும், மருத்துவ வசதியும் இன்று வரை கூட இல்லை.  கிராமங்களில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைவலிக்கு மாத்திரையும் இல்லை.  அதை தருவதற்கு மருத்துவரும் இல்லை.  எனவே வளர்ந்து விட்ட இந்தியா என்று காட்டப்படும் சித்திரம் வீக்கமே தவிர வளர்ச்சியில்லை.
  முன் எப்போதும் இல்லாததை விட இப்போது விவசாய தொழில் பெரிய பின்னடைவை எதிர் நோக்கி உள்ளது.  பருவ நிலை மாற்றத்தால் ஒரு பகுதியில் அதிகப்படியான மழையும், இன்னொரு பகுதியில் மழையே இல்லாத நிலையும் விவசாய மகசூலை சீர்குலைக்கிறது.  நீர் தேக்கங்களில் பராமரிப்பு சரிவரை இல்லை என்பதினால் தண்ணீர் தேவைக்கு குறைவாகவே கிடைக்கிறது. 

   அசுர வேகத்தில் ஆற்று மணல் படுகைகள் கொள்ளையடிக்கப்படுவதினால் நிலத்தடி நீருக்கும் பயங்கர பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.  முறைப்படி தண்ணீர் விட முடியாமல் மின்சாரம் கழுத்தை அருக்கிறது.  கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை.  களத்துமேட்டு நெல்லு வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் உழைப்பவனின் உயிரில் பாதிப்போய் விடுகிறது.  ஆனால் நமது மத்திய மாநில அரசுகள் இந்தியாவின் முதுகு எலும்பான விவசாயத்தை பற்றி கிஞ்சிதித்தும் கவலைப்படுவதில்லை.

  அவர்களுடைய கவலைகள் புதிய திட்டங்கள் எதை எதை போட்டு எவ்வளவு நீதி ஒதுக்கீடு செய்து அதில் எத்தனை சதவிகிதம் கமிஷன் அடிக்கலாம் என்றும், எந்த பெரிய முதலாளிக்கு அரசாங்க ஒப்பந்தங்களை கொடுத்து எப்படி விசுவாசத்தை காட்டலாம் என்றும், அடுத்து வரும் தேர்தல்களில் எவ்வளவு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெறலாம் என்றும் இருக்கிறதே தவிர மக்கள் நலம், நாட்டு வளர்ச்சி என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை.  உண்மையில் இந்திய தலைவர்கள் மட்டும் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களாக இருந்திருந்தால் அமெரிக்க நாட்டையே பொருளாதார பலத்தால் அச்சுறுத்தி அடக்கி வைக்கலாம்.  அந்தளவு செல்வங்கள் நம்மிடம் குவிந்து கிடக்கிறது.  எடுத்து பயன்படுத்த தான் ஆட்கள் இல்லை.

 நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்ற உறுதி படைத்த தலைவர்கள் இருந்திருந்தால் இன்று உலகமே கைகொட்டி சிரிக்கும் அலைகற்றை ஊழல் நடைபெற்றிருக்கவே முடியாது.  2 ஜி அலைகற்றைகளை வாங்கிய நிறுவனங்கள் சம்பாதித்த தொகையை முழுவதும் நாட்டு நல திட்டங்களில் செலவிடப்பட்டிருந்தால் பாதி இந்தியாவை ஜப்பானாக்கி இருக்கலாம்.


  உதாரணமாக ஸ்வான்டெலிகாம் நிறுவனம் தான் வாங்கிய அலைகற்றையின் ரூ. 1500 கோடி உரிமத்தில் நாற்பத்தி ஐந்து சதவிகிதத்தை ஒரே வாரத்தில் விற்று 6000 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளது.  இதே போல யுனிடெக் நிறுவனம் 1658 கோடி ரூபாய்க்கு அரசாங்கத்திடம் பெற்ற உரிமத்தை சில நாட்களிலேயே 7442 கோடிக்கு விற்று உள்ளது.  டாட்டா டெலிசர்வீஸ் நிறுவனம் 1667 கோடிக்கான உரிமத்தில் வெறும் இருபத்தி ஐந்து சதவிகிதத்தை டோக்கோமா நிறுவனத்திற்கு 13000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.  ஒரே வாரத்திலேயே இத்தனை கோடி ரூபாய்களை சம்பாதிக்க முடியும் என்று தனியார் முதலாளிகளுக்கு தெரிந்த விஷயம் அரசு தலைவர்களுக்கு தெரியாது என்றால் அதை நம்புவதற்கு இந்தியர்கள் அனைவருமே மடையர்களாகத் தான் இருக்க வேண்டும்.

  அலைகற்றை ஊழல் மட்டுமல்ல இந்திய தேசிய காங்கிரஸின் ஊழல் மகுடத்தில் இன்னொரு வைரமாக காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் அமைந்துள்ளது.  பதினைந்து நாட்கள் மட்டுமே நடைபெற்ற ஒரு விளையாட்டு போட்டிக்கு அரசாங்கம் செலவிட்ட மக்கள் வரிப்பணம் ரூ. 70 ஆயிரம் கோடி ஆகும்.  இதே விளையாட்டு போட்டியை 2006-ல் ஆஸ்திரேலிய நாடு நடத்திய போது அங்கு செலவான தொகை 5200 கோடி மட்டும் தான்.  நான்கு ஆண்டுகளில் விலைவாசி உயர்வு நூறு சதவிகிதத்தை தாண்டி உயர்ந்து விட்டது எனக் கொண்டாலும் பத்தாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட வாய்ப்பே இல்லை.  ஆனால் மக்கள் வரிபணத்தில் 70000 கோடி ரூபாய் எடுத்து யார் யாரோ உண்டு கொழுத்து விட்டார்கள்.  மிக பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்பட்ட பீரங்கி பேரல் ஊழல் கூட இப்போது நடந்திருக்கும் ஊழல் முன்னால் தூசுக்கு சமமாக ஆகாது.


  இத்தகைய பெரிய ஊழல்களை ஆ. ராசா, சுரேஷ் கல்மாடி போன்ற தனிநபர்கள் மட்டுமே செய்தார்கள் என்பதை நம்புவது கடினம்.  பிரதமரின் அறிவுரையையும் மீறி ஊழல் நடந்ததாக சொல்வதை பார்க்கும் போது இந்தியாவின் அதிகார பீடம் பிரதமறிடம் இருக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

  தேசிய அளவில் கருணாநிதி என்ற தனிநபரின் பலம் சுண்டக்காய் அளவு தான்.  மத்திய மனிதர்களின் அதிகார ஆசிர்வாதம் இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் மூட்டையை தனி ஒருவராக சுமந்து கொண்டு தமிழ் நாட்டிற்கு வந்திருக்க முடியாது.  ஊழலில் பங்கு பெற்ற பயன்பெற்ற பலரில் கருணாநிதி குடும்பமும் ஒன்றாகயிருக்குமே தவிர அவர்களே முற்றிலும் சுவை பார்த்தவர்கள் என்பதை நம்புவது கடினம்.

 பொதுவாழ்வில் நேர்மை, ஒழுக்கம் என்று வீராப்பு பேசும் நேரு குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த இரண்டு ஊழல்களும் நடைபெற்றிருக்கவே முடியாது.  எனவே விசாரிக்க வேண்டியது தி.மு.க. வை மட்டுமல்ல சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் கூடவே தான்.  


   இந்த ஊழல் முன்னால் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் விசாரணை குழுக்கள் எதுவும் உருப்படியான செயலை செய்து விட இயலாது.  இந்திய மக்கள் சக்தி தான் தவறுகளுக்கு எல்லாம் மூலமாக இருக்கும் குடும்பங்களின் அதிகார வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலும்.  அப்படி முடிவுக்கு வராத வரையில் இந்தியா வளர்ந்த நாடு அல்ல, வளரும் நாடும் அல்ல, பைத்தியகார நாடு.


மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gif

Contact Form

Name

Email *

Message *