Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்


    மது முன்னோர்கள் கலைகளில் மிக சிறந்ததாக ஓவியங்களை கொண்டாடினார்கள்.  ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி சொல்ல வேண்டிய விஷயத்தை தூரிகை எடுத்த ஓவியன் ஒரே ஒரு படக்காட்சியில் சொல்லிவிட முடியும் என்பதினால் தான் அது கலைகளின் சிறந்ததாக போற்றப்படுகிறது.  மனிதனின் சரித்திரத்தோடு ஆதி முதல் பின்னி பிணைந்து இருப்பது ஓவியம் தான்.  தனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்பிய மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்தது எழுத்துக்களை அல்ல ஓவியங்களைத் தான்.

    ஆதி மனிதன் தான் வாழ்ந்த குகைகளில் பச்சிலை சாறு செம்மண் கொழுப்பு ஆகியவைகளை கொண்டு மிருகங்களின் உருவங்களையும் வேட்டையாடும் விதத்தையும் மிக அழகாக தீட்டியுள்ளான்.  குகைகளில் மட்டுமல்ல மலைச்சரிவுகளிலும் அவன் தீட்டியுள்ள பல்வேறு ஒவியங்களை இன்றும் காணலாம்.  அத்தகைய ஓவியங்கள் மத்திய பிரதேசத்திலுள்ள சிங்கன்பூர் மலைச்சரிவு, மிர்சாபூர், பாந்தா ஆகிய இடங்களிலுள்ள மலைச்சரிவுகளிலும், விந்திய மலைத் தொடரிலுள்ள மகாதேவன் மலையிலும், ஆந்திராவின் பெல்லாரி, கேரள வய நாட்டில் ஏதக்கல், தமிழகத்தில் மல்லபாடி, கீழ்வாலை, செத்தாவரை ஆகிய பகுதிகளில் ஆதிகால மனிதனின் ஓவியங்களை தாங்கி நிற்கிறது.


     இந்த ஓவியங்களையும் உலகின் மற்ற பகுதிகளில் கிடைத்த இதே போன்ற ஓவியங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.  சிந்து சமவெளி நாகரிக அகழ்வாய்வு பொருட்களில் கிடைத்துள்ள மண்பாண்டங்களில் வரையப்பட்ட ஓவியத்திற்கும், கிரேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களிலும் உள்ள ஒற்றுமை இப்போதைய காலத்தை போல சிந்தனையின் வளர்ச்சியும் மாறுபாடும் ஆதிகாலத்தில் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மனித குலம் ஒரே மாதிரியான வாழக்கை முறையும், போராட்ட சவால்களையும் பெற்றிருந்தது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.



    மிக பழைய கால இந்திய இலக்கியங்களை சதுர் வேதங்களிலும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், ஜெயின மத ஆதார நூல்களிலும் ஓவியங்களை பற்றி ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.  ஓவியகலைக்கு என கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விஷ்ணு தர்மோந்திரம் என்ற நூல் முதல் ஓவிய நூல் என்று சொல்லலாம்.  தென்னிந்தியாவில் தோன்றிய அபிநவ சிதார்த்த சிந்தாமணி, சிவத்துவ ரத்தினகாரம் நாரத சிற்பம் ஆகிய பழைய நூல்களில் ஓவியங்களைப் பற்றிய சுவை மிகுந்த பகுதிகள் அழகாக சொல்லப்பட்டுள்ளன.  இது தவிர தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க தமிழ் நூல்கள் ஓவியங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்கின்றன.


     ஓவியங்களாக இருக்கட்டும், அழகிய பாடல்களால் உருப்பெற்ற காவியங்களாக இருக்கட்டும் அவைகள் ரசனை உணர்வை மட்டும் தூண்ட கூடியதாக இருந்தால் மக்களின் மனதில் நிலைத்து நிற்காது.  எல்லா தரப்பு மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான ரசனை இருக்கும் என்று யாராலும் சொல்லி விட முடியாது.  ஒருவனுக்கு அழகாக இருக்கும் அதே நேரம் மற்றவனுக்கு அழகற்றதாக ஒரு காட்சி தெரியலாம்.  ஆனால் உறுதியான தெளிவான ஒரு கருத்து எழுத்தின் மூலமோ, சித்திரங்களின்  மூலமோ சொல்லப்பட்டு விட்டது என்றால் அந்த கருத்தை ஏற்பவனது மனதும், எதிர்பவனின் மனதும் நிச்சயம் புறக்கருவிகளான கலையின் அம்சத்தை எந்த சூழலிலும் மறக்காது.  இந்த அடிப்படை வேற்றுமை தான் இந்திய ஓவியங்களுக்கும், ஐரோப்பிய ஓவியங்களுக்கும் மத்தியில் நிலவுகிறது.



     ஐரோப்பிய ஓவியங்கள் உடல் உறுப்புகளின் லாவண்யத்தை தெளிவு படுத்தியோ மிகைப்படுத்தியோ நமக்கு தருகிறது.  அவற்றை ஆழ்ந்து ரசிக்கும் போது நம்மையும் அறியாமல் நமது மனம் புறப் பொருட்களை ஆதாரமாக பற்றிக் கொள்கிறது.  எப்போதுமே நமக்கு வெளியே இருக்கும் பொருட்களின் மீது கொள்ளும் பற்றுதல் மனித துன்பங்களுக்கு காரணமாக இருக்கிறது.

    இந்திய ஓவியங்கள் புறகாட்சியை பிரதானப்படுத்தி காட்டினாலும் கூட அந்த புற பொருட்களின் உள்ளிடாக இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது.  சிந்தனையும் விருப்பமும் வெளியே நோக்கி பயனப்பட்டால் எதிர்வரும் துன்பம் உள்முக பயனத்தில் இன்பமாக பரிணமிக்கிறது.  


    உதாரணமாக சித்தன்ன வாசலில் காணப்படும் நடனமாதுவின் ஓவியம் ஒரு பெண்ணின் உடலழகை நமக்கு காட்டினாலும் அவளுடைய கண்களில் மறைந்திருக்கும் அமைதி என்ற காந்த சக்தி பாத்த மாத்திரத்திலேயே நம்மை அவள் உடலழகையும் தாண்டி கண்வழியாக உள்ளே ஈர்க்கிறது.  மனம் ஒரு நிலைப்பட்ட நாட்டியம் அல்லது வேறு எந்த செயலும் கூட நிரந்தரமான அமைதிக்கு நம்மை அழைத்து செல்லும் என்று சொல்லாமல் சொல்கிறது.  இப்படி ஏராளமான உள்ளுணர்வுகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள் தக்கானப் பகுதியில் சாதவாகனர் ஓவியங்களிலும், அஜந்தா குகை ஓவியங்களிலும் காணலாம்.

    ஆரம்ப காலங்களில் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்திய ஓவியங்கள் கி.பி. 335-க்கு பிறகு அதாவது குசானர் காலத்து கிரேக்க, ரோம, ஈரானிய நுட்பம் கலந்து புறப்பொருட்களையும், அதில் கிடைக்கும் மனமகிழ்வையும், புதிய கற்பனைகளையும் வெளிப்படுத்த துவங்கின எனலாம்.


    தற்போதைய இந்திய சரித்திரத்தை ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால் ஊழலின் பொற்காலம் என்று சொல்லலாம்.  இதே போலவே இந்திய ஓவியங்களிள் பொற்காலம் எது என கேட்டால் குப்தர்களின் காலம் என துணிந்து சொல்லலாம்.  கி.பி. 300 முதல் கி.பி. 600 வரை இந்திய ஓவியங்கள் அசுரவளர்ச்சி பெற்றது எனலாம்.  இந்த காலகட்டங்களில் தான் அஜந்தா குகை ஓவியங்களின் பதினாறாவது குகையிலிருந்து பத்தொன்பதாவது குகை வரை புதிய ஓவியங்கள் வரையப்பட்டன.  குப்தர் கால மறுமலர்ச்சியின் தாக்கம் தக்கானத்திலும் அதை தாண்டியுள்ள தெற்கு பிரதேசங்களிலும் பரவ ஆரம்பித்தது.

    பொதுவாக அந்த ஓவிங்கள் புத்தரின் வாழக்கையை தெய்வீக தன்மையை விவரிப்பதாகவே அமைந்துள்ளதை காணமுடிகிறது.  சிற்ப சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்படும் மிக நுணுக்கமான வரைமுறைகள் அஜந்தா ஓவியங்களில் பின்பற்றப்பட்டுள்ளது.  அந்த ஓவியங்கள் முதலில் குகை சுவர்களில் அரிசி உமியும், தாவர பிசினும் களி மண்ணுடன் கலந்து சுவற்றைப் பளபளப்பாக்கி பல வண்ண கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டு எளிய முறையில் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது.  ஓவிய கோடுகள் கருப்பு மற்றும் செம்மை வண்ணங்களிலேயே அதிகமாக வரையப்பட்டுள்ளது.


    தொல்காப்பியம், மதுரை காஞ்சி சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய பழம்பெரும் இலக்கிய நூல்கள் தமிழ்நாட்டின் ஒவியகலையை சிறப்புற நமக்கு எடுத்துக்காட்டுகிறது.  ஒரு பல்லவ மன்னன் தக்கண சித்திரம் என்றொரு தனி நூலை ஓவிய கலைக்காக எழுதியுள்ளான் என்றால் அக்கால மன்னர்களும் மக்களும் ஓவியத்தின் மீது எத்தகைய காதல் கொண்டிருந்தார்கள் என்பது நன்கு விளங்கும்.  கோவில்களில் சுவர்களிலும் அரண்மனை மண்டபங்களிலும் மட்டுமல்ல திரைசீலைகளிலும் பெண்கள் ஆசையுடன் அணியும் புடவைகளிலும் கூட கண்ணை கவரும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன.

    பல்லவர் காலத்தில் ஏற்பட்ட இந்து சமய மறுமலர்ச்சியால் ஓவியக்கலை புத்துயிர் பெற்றது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமலைபுரம் என்ற ஊரிலுள்ள குகை ஓவியங்களும் இதற்கு சரியான எடுத்து காட்டு, இந்த ஓவியங்களில் இறைவனின் திருவுறுவத்திற்கு இணையாக அரசன் அரசி படைவீரர்கள், நடனமாதர்களின் ஓவியங்களும் கலை நுணுக்கத்துடன் தீட்டப்பட்டுள்ளன.  இந்த ஓவியங்களை தக்காணத்தில் உள்ள எல்லோர ஓவியங்களிலும் கைலாச நாதர் கோவில் ஓவியங்களுக்கும் எந்த வகையிலும் சளைத்தது அல்ல.  சோழர்கள் விஜய நகர மன்னர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஆகியோர் கால ஓவியங்கள் மிக சிறந்தது ஆகும்.


    திருவிஞ்சைகளம் பள்ளிமனை திருப்பாறையாறு, திரிச்சூர் வடக்கு நாதர் கோவில் மட்டான்சேரி அரண்மணை, வைக்கம் ஏற்றமானோர், சிற்றரல், கிருஷ்ணாபுரம், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் கேரளபாணி ஓவியத்திற்கு சிறந்த எடுத்துகாட்டுகள் எனலாம்.  இவையெல்லாம் இந்திய ஓவியத்தின் ஆதார வைரங்கள் என்றால் ராஜா ரவிவர்மாவினுடைய ஓவியங்கள் இந்திய ஓவியக்கலையில் மணிமகுடம் எனலாம்.  அவர் வரைந்த ஓவியங்கள் பல அந்த ஓவியங்களில் ஊர்வசியின் ஓவியம், சகுந்தலையின் ஓவியம் ஆகியன ஒரு மனிதனால் மனித உருவத்தை உணர்வுகளை தூரிகை கொண்டு இப்படியும் வரைய இயலுமா? என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 


    தற்கால ஓவியங்களில் சில்பியின் கோட்டு ஓவியங்கள் மனித உணர்வுகளின் மெல்லிய வெளிப்பாட்டை மிக நூதனமான முறையில் வெளிப்படுத்துகிறது எனலாம்.  சில்பி வரைந்த தஞ்வாவூர் பெரிய கோவிலின் ஓவியம் கட்டிட கலையின் கம்பீரத்தை மட்டுமல்ல அதனுள் மறைந்து இருக்கும் நளினத்தையும் இன்னது என நமக்கு பிரித்து காட்டுகிறது.

    மரபுவழி ஓவியங்களை எழுதும் லதா, மாருதி, ஜெயராஜ், ராமு, உபால்டு, ஜமால் போன்ற தற்கால ஓவியர்கள் குப்தர்கால ஓவியர்களுக்கு நாங்கள் கொஞ்சம் கூட சளைத்தவர்கள் அல்ல என்பதை இன்றும் நிருபித்து வருகிறார்கள்.  மனித அங்கங்களை வரையும் லதா, ஜெயராஜியின் லாவகமும், அழகான விழிகளை கவிதை போல வடிக்கும் மாருதியின் கைவண்ணமும் எந்த காலத்திலும் இந்திய ஓவியபாணியை உலகுக்கு பறைசாற்றி கொண்டே இருக்கும்.
மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்      


Contact Form

Name

Email *

Message *