Store
  Store
  Store
  Store
  Store
  Store

முஸ்லிம் என்றால் தீவிரவாதியா...?


  தீவிரவாதி, பயங்கரவாதி என்று அழைக்கப்படுபவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான்.  சைக்கிள் சக்கரத்தில் ஒரு சிறிய கோழி குஞ்சு அகப்பட்டு ரத்தம் சிந்தினால் கூட நமது மனம் பதைபதைத்துப் போய்விடும்.  ஆனால் குண்டு வெடிப்பால் சிதறி விழும் மனித உடல்களையும், பச்சிளங்குழந்தைகளின் பச்சை ரத்தத்தையும், மரண கோலத்தையும் தீவிரவாதிகளின் மனம் மட்டும் ரசிக்கிறது.  அவர்கள் இதயம் என்ன இரும்பினாலா செய்யப்பட்டு இருக்கிறது.

  நமது முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களை மனித வெடிகுண்டான ஒரு பெண் கொலை செய்த போது ஒரு தீவிரவாதி தன்னையே மாய்த்து கொண்டு செயல்படுவான் என்பதை முதல் முறையாக அறிந்து ஒட்டுமொத்த தமிழ்நாடே திகைத்து போனது.  இந்திய தேசமே உறைந்து போனது.

 உயிர்களை கொன்று பயங்கரவாதிகள் சாதிக்க நினைப்பது என்ன?  முதலில் பயங்கரவாதிகள் என்றால் யார்?  அவர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோமானால் அவர்கள் மனது இரும்பாக இருப்பதன் ரகசியம் நமக்கு தெரியும்.


   எந்த ஒரு மனிதனும் தீவிரவாதியாக பிறப்பதில்லை.  மற்ற மனிதர்களின் சுயநல மூளை நயவஞ்சகமாக தீட்டும் திட்டங்களாலே தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள்.  மதவாதம், பிரிவினை வாதம், ஜாதியவாதம் ஆகியவற்றை வைத்து பிழைப்பு நடத்துகின்ற மனிதர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரியும் பக்குபடாத இளைஞர்களை குறிவைத்து பிடித்து மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக ஆக்குகிறார்கள். 

  அல் கொய்தா அமைப்பில் அங்கத்தினர்களை சேர்த்து கொள்ளும் முறையை உற்று கவனித்தாலே இந்த உண்மை தெரியும்.  கொள்கைகளால் ஈர்க்கப்படும் போது, சித்தாந்தங்களால் கவரப்படும் ஒன்றிரண்டு நபர்கள் தான்.  இவர்கள் இயக்கங்களின் மூளையாக திட்டமிடுபவர்களாக செயல்படுவார்களே தவிர களப்பணியாற்றுவார்கள் என்று சொல்ல இயலாது  .  களம் இறங்கி செயலாற்றுவது  தொன்னூறு பங்கு இருப்பது வேலை வெட்டி இல்லாத, அறிவு வளர்ச்சி பெறாத, உணர்ச்சி மயமான இளம் கும்பலே ஆகும்.


   பாம்பை பார்த்தால் பயப்படுபவனுக்கு அடிக்கடி பாம்பை காட்டி மறைத்தால் அதன் மீதுள்ள பயம் படிப்படியாக குறைந்து விடும்.  அதை போலத்தான் ரத்தத்தை கண்டாலே நடுங்கி சாகும் இயல்புடையவர்களுக்கு ரத்தத்தையும், வன்முறை காட்சியையும் அடிக்கடி காட்டி கொலைகாரனே பிரச்சனைகளின் பரிகாரகன் என்ற சிந்தனையை வளர்த்து விட்டால் அவன் எத்தகைய படுபாதக செயல்களையும் ஈவு இரக்கமில்லாமல் செய்து முடிப்பான்.

 பயங்கரவாதம் என்றவுடன் அது தனி மனிதர்களாலோ ஒரு இயக்கத்தாலோ திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலை மட்டும் தான் நாம் கவனத்தில் கொள்கிறோம்.  அரசு நிர்வாகம் செய்யும் பயங்கரவாதத்தை நிறைய பேர் கவனத்தில் கொள்வது கிடையாது.  உதாரணமாக இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீதும் பாகிஸ்தான் அரசாங்கம் அங்குள்ள மைனார்ட்டி இந்துக்கள் மீதும் தொடுக்கும் திட்டமிட்ட தாக்குதலை அரசு பயங்கரவாதம் என்று சொல்லலாம்.  இந்த மாதிரியான அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நபர்களும் வேறு வழியில்லாமல் அரசாங்கத்தை பழிவாங்க ஆயுத தாரிகளாக மாறி தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.


   வறுமை, வேலையில்லாத திண்டாட்டம் போன்றவைகளும் தீவிரவாதிகளை பெருமளவு உருவாக்குகிறது.  மேற்குறிப்பிட்ட பயங்கரவாதிகளை விட மிக கொடுமையானது கடத்தல் வியாபாரிகள் போன்றோர்களால் உருவாக்கப்படும் தீவிரவாதிகளால் கற்பனையே செய்து பார்க்க முடியாத கொடூரங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

  பயங்கரவாதிகளும் அவர்களை இயக்குபவர்களும், வன்முறை செயல்களால் என்ன நிகழ வேண்டுமென்று நினைக்கிறார்கள்?

 அமெரிக்காவின் இரட்டை கோபுரம், விமானங்களால் தாக்கப்பட்டு சீட்டுகட்டு மாளிகை போல சரிந்து விழுகிறது.  ரத்தமும் சதையுமாக சில ஆயிரம் உயிர்கள் சிதறி போகின்றன.  இந்திய நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த பயங்கரவாதிகள் பல உயிர்களை ரத்த சேற்றில் தள்ளுகிறார்கள்.  லண்டன் நகரில் பாதாள ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு பல அப்பாவி உயிர்கள் துள்ள துடிக்க மாய்ந்து போகிறது.  மும்பை நகரத்திற்குள் தொடர் குண்டு வெடிப்பாலும் தாஜ் ஓட்டல் தாக்குதலாலும் ஏராளமான உயிர்கள் ஒரு நிமிடத்தில் ஊதி அணைக்கப்படுகின்றன.  இத்தனை உயிர்களை காவுக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறார்கள்.  இதனால் அவர்கள் பெறுகின்ற நன்மை என்ன?

  மிகப்பெரிய அரசாங்க அலுவலகங்களை தகர்ப்பதாலும், அரசு தலைவர்களை கொலை செய்வதாலும், ராணுவம் மற்றும் போலிசாரை படுகொலைகள் புரிவதாலும், சாதாரண பொது ஜனங்களை கொத்து கொத்தாக சாகடிப்பதாலும் குறிப்பிட்ட அந்த இயக்கத்தின் பெயரை உலகம் முழுவதும் செய்தி ஊடகங்கள் அடிக்கடி பேசுகின்றன.  இவர்களின் குரலை உலக அரசுகள் செவி திருப்பி கேட்கின்றன.  இவைகள் எல்லாம் இல்லாமல் வேறொரு நன்மையும் உண்டு.

 பொது ஜனங்களிடத்தில் இவர்கள் பெயரில் அளவிட முடியாத பீதி.  இந்த பீதியால் இவர்களுக்கு கிடைக்கும் நன்மை படுகொலைகளை விட அதிகம்.  அரசாங்கத்தின் மீது மக்கள் பயம் கொண்டார்கள் என்றால் அது புரட்சியாக வெடிக்கும்.  உதாரணமாக இந்திய மக்கள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டு கிடந்த போது அரசாங்கத்தின் மேல் அச்சம் இருந்தது.  இந்த அரசு நமது உள்நாட்டு செல்வங்களை எல்லாம் சுரண்டி எடுத்து கொண்டு போய்விடும்.  நமது சுய பண்பாட்டை குழித் தோண்டி புதைத்து விடும்.  எதிர்ப்பு உணர்ச்சியை காட்டத் துவங்கினால் வன் கொடுமையை கட்டவிழ்த்து விட்டுவிடும் என்ற பயம் மக்களிடத்தில் பரவலாக இருந்தது.  


 இந்த அச்ச உணர்வு மறைமுகமாக புரட்சிகாரர்களுக்கு ஊக்கம் கொடுக்க செய்தது.  அதனால் எந்த தனிமனிதனுடைய செயலும் சிந்தனையும் பாதிப்படைந்தது இல்லை.  ஆனால் பயங்கரவாத செயலால் ஒரு பேருந்து வெடித்து சிதறுகிறது.  ஒரு ரயில் தகர்க்கப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.  இந்த கோர சம்பவத்தில் பலியான அப்பாவிகளின் வேதனை சில நிமிட உயிர் வலியோடு முடிந்து விடுகிறது.  ஆனால் அதிலிருந்து தப்பி பிழைத்தவர்கள் அந்த கோர சம்பவத்தை கண்களால் பார்த்தவர்கள் மனதளவில் சந்திக்கின்ற பீதியும், பதட்டமும் எந்த வார்த்தைகளாலும் எடுத்து சொல் முடியாத கொடூரங்களாகும்.

  அந்த காட்சி ஏற்படுத்துகின்ற மனத்தாக்கல் தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும் சம்பந்தப்பட்ட மனிதர்களை நாக பாம்பு போல தாக்கி பித்து பிடித்த நிலைக்கு தள்ளி விடுகிறது.  இது தான் பயங்கரவாதத்தின் உண்மையான உள்நோக்கம்.  இந்த பீதி உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டால் முழு வெற்றி பெற்றவர்களாகி விடுகிறார்கள்.


  எந்த நேரத்தில் எந்த கார் வெடித்து சிதறும், சாலையில் கிடக்கின்ற சாதாரண பொட்டலம் வெடித்து சிதறி குழந்தை குட்டிகளை பழி வாங்கி விடுமா?  ரயில் பயணத்தை உருப்படியாக முடிக்க முடியுமா?  விமானத்தில் உயிருடன் ஏறி இறங்கி விட முடியுமா?  என்ற பீதி உணர்வு ஒரு தனி மனிதனை மட்டுமல்ல ஒரு நகரத்தை மட்டுமல்ல ஒரு தேசத்தையே பிடித்து ஆட்டி வைத்தால் அந்த பீதி உணர்வு தான் பயங்கரவாதிகள் விரும்பும் இறுதி இலக்கு.

  பீதி உணர்வு மேலோங்கி விட்டால் அரசு தலைவர்கள் பேச்சு வார்த்தைகளில் பிடி கொடுப்பார்கள்.  சர்வதேச நெருக்கடியில் நிர்வாகத்தை பணிய வைக்கும்.  தங்களது கோரிக்கைகள் மிக சுலபமாக நிறைவேறும், என்ற எதிர்பார்ப்பில் தான் அதிபயங்கர செயல்களையும் துணிச்சலாக செய்கிறார்கள்.

ஆனால் உண்மையில் சித்தாந்தப்படி வன்முறையின் மூலம் மற்றவர்களை கொடுமைபடுத்துவதன் மூலம் எந்த காரியமும் சாதிக்கப்பட்டதில்லை.  மற்றவர்களை துன்பம் அடைய செய்வதற்கு பெரிய வீரர்கள் தேவையில்லை.  நேருக்கு நேர் நின்று மோத அழைத்தால் பயந்து ஓடும் தொடை நடுங்கி கோழைகளே போதும்.  மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், நாட்டு விடுதலையின் பெயரால் மற்றவர்களை சாகடிப்பவர்கள் கோழைகள் மட்டுமல்ல உலகத்தின் எத்தனை மொழிகள் இருக்கிறதோ அத்தனை மொழிகளிலும் உள்ள கீழ்த்தரமான வார்த்தைகளால் அழைக்கப்பட வேண்டியவர்கள்.


  வன்முறை என்பது மனித குலத்தின் எதிரி என்பது போல ஒரு குறிப்பிட்ட இனத்தாரையே வன்முறையாளர்களாக பார்ப்பதும் மனித குலத்திற்கு விரோதமான செயல் தான்.  அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் ஒரு வகையில் மூடர்கள் என்றும், இன்னொரு வகையில் வன்முறையை தத்துவ ரீதியில் தூண்டுபவர்கள் என்றும் அழைக்கலாம்.  நமது நாட்டில் இப்படிப்பட்ட மனோபாவம் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.  தீவிரவாதம் நம் நாட்டை பிடித்திருக்கும் ஒரு கொடிய வியாதி என்றால் இந்த மனோபாவம் ஒரு பெரிய வியாதியாகும்.

  கோவை குண்டு வெடிப்பு நடந்த சில நாட்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் சென்று கொண்டு இருந்தேன்.  நான் பயணம் செய்த அதே பெட்டியில் ஒரு இஸ்லாமிய நண்பரும் பயணம் செய்தார்.  அவர் இஸ்லாமிய முறைப்படி தலையை முண்டகம் செய்து நீளமான தாடி வைத்திருந்தார்.  கலகலப்பாக என்னோடு பல விஷயங்களை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்.  


   அது இரவு நேரம்.  ரயில் ஏதோ ஒரு ஊரில் நின்றது.  நாங்கள் இருந்த ரயில் பெட்டியில் சில காவலர்கள் ஏறினார்கள்.  என்னிடம் வந்து சாதாரணமாக விசாரனை செய்துவிட்டு அந்த இஸ்லாமிய நண்பரை பல குறுக்கு கேள்விகள் கேட்டு விசாரித்தனர்.  அவர் கையில் வைத்திருந்த பையையும் அவர் உடலில் பல பாகங்களையும் முரட்டுத்தனமாக தொட்டு சோதனை செய்தனர்.  அந்த நண்பர் உண்மையிலேயே அச்சத்தாலும் வெட்க உணர்வாலும் கூனி குறுகி போய்விட்டார்.  அவர் மனம் அடைந்த வேதனை கண்களில் முட்டி நின்ற நீரால் என்னால் உணர முடிந்தது.  யாரோ சில முஸ்லீம்கள் செய்த பாதக செயலுக்கு இவர் எப்படி பொறுப்பாவார்.  இவர் ஏன் அதற்காக துன்பப்பட வேண்டும்.  அவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்து பார்த்தால் வேதனையும், வலியும் எவ்வளவு என்பது நன்றாக தெரியும்.

அந்த அன்பரை இத்தகைய முரட்டுதனமான சோதனைகளுக்கு உட்படுத்தியது காவலர்களின் தவறு என்றாலும் நான் முழுமையாக காவலர்களை குறை சொல்ல மாட்டேன்.  அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான்.  தாடி வைத்தவன் பயங்கரவாதிகளாகத் தான் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை அவர்களுக்கு கொடுத்தது யார்?  நிச்சயம் அரசாங்கம் அல்ல, சில பயங்கரவாத குழுக்களும், பல வெகுஜன மீடியாக்களும் தான்.


   ஒரு பேருந்து நிலையத்தில் கையில் வெடி பொருட்களுடன் ஒரு மனிதன் கைது செய்யப்படுகிறான் என்று வைத்து கொள்ளுங்கள்.  அதைப்பற்றி செய்தி அடுத்த நாள் பத்திக்கையில் வரும் போது அவன் பெயர் மாணிக்கம் என்று இருந்தால் வெடி மருந்துடன் மர்ம நபர் கைது என்று வரும்.  அதே நேரம் அன்வர் பாஷா என்று இருந்தால் வெடி பொருட்களுடன் முஸ்லீம் தீவிரவாதி கைது என்று தான் செய்தி வரும்.

  தீவிரவாதியாக இருப்பவன் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தால் என்ன?  அதை பற்றிய செய்திகளை வெளியிடும் போது வெகுஜன ஊடகங்கள் சமூக பொறுப்புணர்வோடு செயல்பட்டால் எந்த விபரீதமும் கிடையாது.  நக்சல் தீவிரவாதிகள் சமூக பேராளிகளாக சித்தரிக்கும் திரைப்படங்களும், செய்தி ஊடகங்களும் இந்த விஷயத்தில் பாராபட்சம் காட்டுகிறது என்றே சொல்வேன்.

சில மாதங்களுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் நக்சல் தீவிரவாதிகள் பணக்காரர்களையும், போலிசுக்கு தகவல் கொடுப்பவர்களையும் மட்டும் தான் கொல்வார்கள் என்ற அறிய பெரிய தத்துவ முத்தை கொட்டி வைத்தார்.  அதை கண்டனம் செய்து அது தவறு என்று நாட்டிலுள்ள எந்த பெரிய பத்திக்கைகளும் எந்த ஒரு பெரிய தலைவர்களும் வாய் திறக்கவே இல்லை.  இது மட்டுமல்ல சில பத்திரிக்கைகள் நக்சல் பாரிகளை ஏழைகள் ஒடுக்கப்பட்டோர் ஆகிய மக்களின் இதய குரல் என்று எழுதினார்கள்.


 இவர்கள் எல்லாம் என்ன நினைக்கிறார்கள்.  இந்திய போலிஸ்காரர்கள் அனைவரும் நாட்டு நலனுக்கு விரோதமாக நடப்பவர்களா?  தீவிரவாதிகளை பற்றி தகவல்களை போலிஸ்காரர்களுக்கு கொடுப்பவர்கள் தேச தூரோகிகளா?  பணகாரர்களுக்கு உயிருடன் வாழ உரிமையில்லையா என்பதை விளக்கினால் நன்றாகயிருக்கும்.

  ஒரு முஸ்லிம் குண்டு வீசினால் அதன் பெயர் பயங்கரவாதம்.  அதையே ஒரு நக்சல் பாரிகள் செய்தால் அவன் புரட்சிகாரனா கொலைகாரன் எவனாகயிருந்தாலும் அவனை கொடியவனாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர ஏற்ற தாழ்வோடு பார்ப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அழகல்ல.  இந்த விஷயத்தில் நமது மீடியாகாரர்கள் அனைவருமே பக்கம் சார்ந்து செயல்படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

முஸ்லிம்களை பற்றி எப்படி ஒரு தவறான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் பரப்பிட்டு வருகிறதோ அதே போலவே தான் சில இந்து அமைப்புகளை பற்றியும் தவறான தகவல்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்துவர்கள் மத்தியில் பல மீடியாக்கள் பரப்பி வருகின்றன.  சில முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு ஆதரவாக பேசுகின்ற எல்லோரையுமே தீவிரவாதிகள் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.  ஒரு முஸ்லிம் தன் மதத்தை பற்றி உயர்வாக எழுதவும், பிரச்சாரம் செய்யவும் எப்படி உரிமை பெற்றவனாக இருக்கிறானோ அதே உரிமை இந்துக்களுக்கும் உண்டு.


 இஸ்லாத்தை பற்றி உயர்வாகவும் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை வளமைக்காகவும், பரிந்து பேசினால் எப்படி ஒருவனை தீவிரவாதி என்று அழைக்க கூடாதோ அதே போலவே தான் இந்து மதத்தை பற்றியும், இந்து மக்களுக்காவும் பரிந்து பேசுபவரை மத தீவிரவாதி என அழைப்பது முற்றிலும் தவறு.  ஆனால் இந்த தவறுகளை தான் நம் நாட்டு தலைவர்களும் மீடியா மனிதர்களும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.  முஸ்லிம் மற்றும் இந்து ஆதாரவாளர்களை பழமைவாதிகள் என்று விமர்சனம் செய்யும் அறிவுஜீவிகள் நக்சல் பாரிகளை மென்மையான நோக்கில் பார்ப்பது ஏன்?  இதற்கு சரியான விளக்கங்களை அவர்களால் கொடுக்க முடியுமா?

தீவிரவாதத்தில் அது இது என்று பேதங்களே கிடையாது.  எல்லா வகையான தீவிரவாதமும் அடக்கப்பட வேண்டும்.  அப்படி அடக்குவதற்கு சட்ட ரீதிலான முயற்சிகள் ஒரு புறம் நடந்தாலும், நாட்டு நலன் மீது அக்கறை கொண்ட நல்லவர்களும் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வர வேண்டும்.  அன்பாலும் அகிம்சையாலும் வெல்ல முடியாதது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

 குறி பார்க்கும் துப்பாக்கி முன்னால் நெஞ்சை நிமிர்த்தி காட்ட மகாத்மா காந்தியால் மட்டும் தான் முடியும். ஒசாமா பின்லேடனால் நிச்சயம் முடியாது.  நாம் ஒவ்வொருவரும் காந்தியின் வாரிசு என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் பயங்கரவாதத்தை குழித் தோண்டி புதைத்து வெள்ளை ரோஜாவை மலர செய்யலாம்.


மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gif

Contact Form

Name

Email *

Message *