Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடலை தாண்ட வைக்கும் மூலிகை

  யல்நாடுகளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனிதராக பிறந்த அனைவருக்கும் உண்டு. எல்லாதரப்பு மக்களிடமும் இத்தகைய ஆவல் பொதுவாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் உண்டு. தெரியாததை தெரிந்து கொள்ள வேண்டும் புதுமையான அனுபவங்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தை பருவம் முதலே மனிதனுக்கு இயற்கையாக அமைந்து இருக்கிறது.

 இந்த எண்ணம் தான் மனிதனை கடலை கடக்க செய்தது. காற்றில் ஏறி விண்ணை சாடசெய்தது. மிக பழைய காலத்தில் அயல்நாட்டு பயணன் என்பது மிக முக்கியமான மூன்று அம்சங்களை கொண்டு இருந்தது.

 முதலாவதாக பல்துறை அறிவு விஷயங்களை தேடி பெறுவதற்கும் இரண்டாவதாக அந்நிய பொருட்களை உள்நாட்டில் இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் மூன்றாவதாக ராணுவ நடவடிக்கைகளுக்கும் இருந்தது.


  நாள் செல்ல செல்லதான் அயல்நாட்டிற்கு சென்று பணியாற்றுகின்ற வழக்கம் வந்தது. நமது தமிழர்களை பொறுத்தவரை தூரதேச பயணம் என்பது ஆண்டாண்டு காலமாக ரத்ததில் ஊறிய விஷயமாகும். நகரத்தார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற தமிழ் மரபினர் வெளிநாடு சென்று தாய் தமிழகத்திற்கு கொண்டு வந்த பொக்கிஷங்கள் எண்ணற்றவைகளாகும்.

 கொண்டு வந்தது மட்டுமல்ல நம்மூர் கலாச்சார சிறப்பை பல நாடுகளிலும் பரப்பினார்கள் என்று சொல்லவேண்டும். பர்மா,இந்தோனேசியா,மலயா மற்றும் சிங்கப்பூரில் தமிழ் பண்பாடு ஒளிமையமாக திகழ்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நகரத்தார்களே ஆகும்.

நகரத்தார்களை பார்த்தே மற்ற இன மக்களும் அயல்நாட்டு பயணத்தால் தங்களது பொருளாதார பலத்தை அதிகரித்துக் கொள்ள வெளிநாடு செல்ல விருபினார்கள். இந்தியா சுகந்திரம் அடைவதற்கு முன் தமிழகத்தில் வடபகுதி மக்கள் பர்மா நாட்டில் பெருவாரியான தொழில்களை செய்தனர். அதே போலவே தென்தமிழக மக்களின் பெருவாரியான தொழிலாளிகளும், வியாபாரிகளும் இலங்கை நாட்டை நாடி சென்றனர். 


கொழும்பு நகரில் தமிழக வியாபாரிகளின் செல்வாக்கு இன்றும் அதிகமாக இருப்பதற்கு இதுவே மூலகாரணமாகும். ஆனால் இன்றைய தமிழ் மக்கள் பர்மாவையும் இலங்கையையும் விரும்புவதை விட்டுவிட்டனர். சில காலங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளின் மீது இருந்த ஆர்வம் கூட குறைந்துவிட்டது.

 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் மற்றும் வேலை செய்யவே பல தமிழர்கள் விரும்புகிறார்கள். நன்றாக படித்து ஒரளவு விவரம் தெரிந்தவர்களாக இருக்கும் சில தமிழர்கள் அமெரிக்கா சென்று  5,00,000 சம்பளம் வாங்குவதை விட ஆவடியில் இருந்து 50,000 சம்பளம் வாங்குவது மேல் என்கிறார்கள்.

அவர்கள் அப்படி நினைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை ஐரோப்பிய நாடுகளில் தங்குவதற்கு இடம் கிடைப்பது மிக பெரிய சிரமம் அப்படியே கிடைத்தாலும் வாடகை மிக அதிகம். பல இடங்களில் இந்திய உணவு விடுதிகள் இருந்தாலும் உணவு பண்டங்களின் விலை சராசரியான மனிதன் சமாளிக்க கூடிய விதத்தில் கிடையாது.

 பலவேலைகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் என்றாலும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு நம்மவர்களின் பணி திருப்தியளிக்கவில்லை என்றால் உடனடியாக வேலையை விட்டு அணுப்பிவிடுவார்கள். அதாவது வேலைக்கு முழு பாதுகாப்பு கிடையாது. இவைகளை எல்லாம் தாண்டி மணைவி மக்களை அழைத்து செல்லவேண்டும் என்றால் எதிர்கொள்ளும் சிரமங்களை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. குடிக்கிற தண்ணிலிருந்து பின்பற்றுகின்ற கலாச்சாரம் வரையிலும் பிரச்சனை பிரச்சனை பிரச்சனையை தவிர ஒன்றுமே இல்லை.

இந்த மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் அல்லது எதிர்கொண்டு மனம் சலித்து அயல்நாடே வேண்டாம் சாமி சொந்த நாடே சொர்க்கம் என்று சொன்னாலும் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் நபர்கள் அங்கே அனுபவிக்கும் கஷ்டங்களை கதைகதையாய் விவரித்தாலும் அயல்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற மோகம் இன்னும் பலரை விட்டபாடு இல்லை.

 அதற்கு உண்மையான காரணம் என்ன? ஊர் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையா? பல நாட்டு அறிவை தமதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆவலா? இரண்டும் நிச்சயம் இல்லை. திரைகடல் ஒடியும் திரவியம் தேட வேண்டும் என்ற எண்ணம் தான் பலரை உந்தி தள்ளுகிறது.


   வெளிநாடு செல்ல ஆசைபடுவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கிறது. நமது ஜனங்களுக்கு சாதாரண குண்டு ஊசி என்றாலும் கூட அது வெளிநாட்டு பொருள் என்றால் அதன்மீது தனி கவர்ச்சி தான். எனது தகப்பனார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கொழும்பு கடைவீதியில் விற்ற அமெரிக்க தயாரிப்பான ஒரு சிறு விளையாட்டு பொருட்களை வாங்கி வந்து இருக்கிறார். அதை இன்று கூட எனது தாயார் மிக நேர்த்தியாக பாதுகாத்து வருகிறார்.

 அதற்கு என் அப்பா வாங்கி வந்தார் என்பது மட்டுமல்ல, அது மட்டும் தான் காரணம் என்றால் அவர் வாங்கி வந்த மற்ற பொருட்களையும் அதே போல் பாதுகாக்க வேண்டுமெல்லவா? ஆனால் அவைகள் போன இடமே தெரியவில்லை. இது மட்டும் இன்று வரை இருப்பதற்கு U.S.A என்ற எழுத்து இருப்பது தான் வயது வித்தியாசமின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் இப்பழக்கம் சகஜமாக இருக்கிறது.

பொருட்களுக்கும் மட்டும்தான் மோகம் என்றில்லை அயல்நாட்டு படிப்புக்கு கூட அலாதியான மரியாதை இருக்கிறது.  திருநெல்வேலியில் இருக்கும் நண்பர் ஒருவரின் மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்தது.  பையன் படித்து தனியாக மருத்துவமனை நிறுவி கை நிறைய சம்பாதிக்கிறான்.  ஆனால் எனது நண்பர் M.S படித்த அந்த மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்காமல் வெறும் M.B.B.S படித்த பையனுக்கு பெண் கொடுத்தார். 


 எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது.  ஏன் M.S படித்த பையனின் குணமோ குடும்பமோ சரியில்லையா? என்று அவரிடம் கேட்டேன்.  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை இந்த பையன் M.B.B.S  சை ரஷ்யாவில் படித்து இருக்கிறான் என்று பெருமையாக சொன்னார்.  நான் அவரிடம் எதுவும் பேசவில்லை.  ரஷ்யாவின் கல்வி தரம் இந்தியாவின் தரத்தை விட மேம்பட்டது அல்ல என்று எடுத்து சொன்னாலும் அவர் கேட்க போவதில்லை.  நம்மை தான் பைத்தியகாரன் என்பார் .

இவர் மட்டுமல்ல இவரை போல ஏராளமான மனிதர்கள் வெளிநாட்டு படிப்பை சந்திரனனிலிருந்து எடுத்து வந்த கல்லை போல அபுர்வமாகவும், ஆச்சர்யமாகவும் பார்க்கிறார்கள்.  மூலகடையில் விற்கும் எட்டணா முறுக்கு கூட அமெரிக்காவில் இருந்து வந்தது என்று சொன்னால் பத்து நிமிடத்தில் விற்று தீர்ந்து விடும்.  அந்தளவிற்கு அயல்நாட்டு மோகம் நமது ஜனங்களை பிடித்து ஆட்டுகிறது.

அம்மனமாய் அலையும் ஊரில் வேட்டி கட்டியவன் மடையன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.  அதே போலத்தான் வெளிநாடு சென்று மான் பிடிப்பதை விட உள் நாட்டில் முயல் பிடிப்பது மேல் என்று மக்களிடம் சொன்னால் மனநோய் இருப்பதாக அவர்கள் பேசிக் கொண்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை

 என்னிடம் ஜோதிடம் சம்பந்தமாக கேள்வி கேட்க்கும் பல பெற்றொர்கள் தங்கள் பிள்ளைக்கு திருமணமாகுமா? குழந்தை பிறக்குமா? சொத்து சுகம் வாங்க முடியுமா? என்று கேட்பது கூடவே பையன் வெளிநாட்டுக்கு போவானா? என்பதை கேட்பதற்கு மறப்பதேயில்லை.

 ஆமாம் கண்டிப்பாக செல்வான் என்று நாம் சொல்லி விட்டால் அவர்கள் முகத்தில் தெரியும் பாருங்கள் ஒரு ஆனந்தம் பிரகாசம் அதன் அழகே அழகு, இந்த இடத்தில் நான் சொல்லப் போகும் விஷயம் தேவையற்றது என்றாலும் சொன்னால் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.  பையன் வெளிநாட்டுக்கு போவானா என்று கேட்க்கும் எவரும் என் மகளுக்கு வெளிநாட்டு யோகம் உண்டா என்றோ மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வானா என்றோ கேட்பதே இல்லை.  அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாவிட்டாலும் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

நிறைய இளைஞர்கள் வெளிநாடு செல்ல விரும்புவது பணம் சம்பாதிக்கத்தான் என்றாலும் அவர்களது விருப்பம் தவறு என்று நம்மால் சொல்ல முடியாது.  ராமாவரம் ஏரிக்குள் பழைய இரும்பு கடை வைத்திருப்பவன் கூட பெண்  தேட ஆரம்பித்து விட்டால் ஐம்பது சவரன் போட முடியுமா? என்று கேட்கிறான். இன்று அத்தியாவசிய பொருளாகிவிட்ட சாதாரண கிரைண்டர், மிக்ஸி கூட ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்தால் தான் வாங்க முடிகிறது.  ஒட்டு குடித்தனம் நடத்தும் ஒரு சிறிய வீட்டிற்கு வாடகை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.  மளிகை பொருள், காய்கறி இவற்றின் விலை தினசரி ஏறுகிறது.


  இந்த நிலையில் சராசரி மனிதனுக்கு பணம் என்பது தவிர்க்கவே முடியாத தேவையாகிவிட்டது.  எப்படியாவது எந்த வகையிலாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  திருட வேண்டும், ஏமாற்ற வேண்டும், சட்டத்தை மீற வேண்டும் என்று நினைக்காமல் வெளி நாடு சென்றாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

அயல் நாடுகளில் சென்ற சம்பாதிப்பதில் ஒரு நல்ல அம்சமும் இருக்கிறது.  வெளிநாடு சென்று வந்த ஒருவர் ஐந்து வருடமோ, பத்து வருடமோ சிரமமாக இருந்தாலும் அதை தாங்கி கொண்டு நாலு காசு சம்பாதித்து தாய் நாட்டிற்கு வந்தால் எதாவது ஒரு சுய தொழிலை செய்யலாம் அல்லது இருப்பதை வைத்து செட்டும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி போய் விடலாம்.  என்றார். 

அவர் கூற்று சரியானதது தான்.  சோம்பேறித்தனமாக சேமிப்பை செலவழித்துக் கொண்டு இருக்காமல் சுயத் தொழில் தொடங்கி நடத்தலாம் என்பது வரவேற்க தக்க விஷயம் தான்.  ஆனால் இது எத்தனை பேரால் முடிகிறது.  சம்பாதித்த பணமெல்லாம் பிள்ளைகளின் திருமணத்திற்கும் படிப்பிற்கும் செலவழித்துவிட்டு வெறுங்கையாய் இருப்பவர்கள் எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனாலும் ஒரு ஆறுதல் அவைகளையாவது அவர்களால் செய்ய முடிகிறதே என்பது தான்.


என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்.  அந்த காலத்தில் நகரத்தார்கள் மிக சுலபமாக அயல்நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்து இருக்கிறார்கள்.  அத்தகைய வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்தவர்கள் மிக குறைவு.  சுலபமாக வெளிநாடு செல்லவும் அங்கு சம்பாதிக்கவும் தங்களது மூளை உழைப்பை தவிர வேறு எதையாவது அவர்கள் பயன்படுத்தினார்களா?

 நண்பரின் இந்த கேள்விக்கு தெளிவான பதில் சொல்ல அப்போது என்னிடம் எந்த விவரங்களும் கிடையாது.  ஆனாலும் அந்தகேள்வி என் மனதிற்குள் ஒரு பகுதியில் விடை தெரிவதற்காக பதுங்கியிருந்தது.  ஒரு சமயம் திருவண்ணாமலையில் இருந்து என்னை காண வந்த ஒரு சாது அந்த கால செட்டிமார்கள் அயல் நாட்டு பிராயாணம் வெற்றிகரமாக அமைய அபூர்வ மூலிகைகளால் ஆன அஞ்சனங்களை பயன்படுத்தினார்கள் என்ற ஒரு தகவலை தந்தார்.  ஆனால் அவருக்கு அதைப்பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை.  அப்படியொரு குறிப்புகள் நிச்சயம் பழங்கால சுவடிகளில் இருக்குமென்று சில காலம் தேடிப்பார்த்தேன்.  எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.

சில அபூர்வமான மூலிகைகளை ஒரு வனவாசி பெரியவர் என்னிடம் கொண்டு தருவார்.  காட்டில் சிரமப்பட்டு தேடியெடுக்க வேண்டிய பொருள் என்பதினால் அவைகளுக்கு அவர் அதிகப்படியான பணத்தை எதிர்ப்பார்ப்பார்.  ஆனால் அவரிடம் இருந்து பெறுகிற பொருள் மிக சுத்தமானதாக இருக்கும்.  அவர் ஒரு முறை பேச்சுவாக்கில் என்னிடம் கடல் தாண்டும் மூலிகை இருக்கிறது வேண்டுமா?  என்று கேட்டார். 

 
  நான் விவரம் தெரியாமல் என்னவென்று கேட்டேன்.  அதற்கு அவர் இது தெரியாதா சாமி?  அந்த காலத்தில் செட்டியாருங்க இந்த மூலிகையால் செய்த அஞ்சனத்தை தங்களோடு எடுத்து போவார்கள்.  இது கையில் இருந்தால் அயல் நாட்டு தொழிலில் சிக்கல் வராது.  அபாயமும் கிட்டே நெருங்காது.  கையில் காசும் சேரும் அயல் நாட்டில் செய்யும் தொழில்களில் ஏற்ப்படும் சிக்கல்களும் தீரும் என்று சொன்னதோடு இல்லாமல் இன்று வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்பி செல்ல முடியாமல் இருப்பவர்களும் இதை பயன்படுத்தலாம் என்ற தகவலையும் தந்தார்.

எனக்கு தெரியாத விஷயத்தை தெரியாது என்று ஒத்து கொள்வதில் நான் எப்போதுமே தயங்கியது கிடையாது.  அதனால் அவரிடம்  அந்த மூலிகையை வெறுமனே வாங்கி வைத்து நான் என்ன செய்ய போகிறேன், அதை வைத்து எனக்கு அஞ்சனம் செய்ய வழி தெரியாதே என்று கேட்டேன்.  அவர் எனக்கும் தெரியாது.  ஆனால் ஒரு பெரியவர் இருக்கிறார்.  அவருக்கு பணம்கொடுத்தால் நிச்சயம் சொல்லித் தருவார்.  வேண்டுமானால் அவரை கூட்டி வரட்டுமா? என்றார் அந்த பெரியவரை வரச்சொல்லி அந்த அஞ்சனம் செய்யும் முறையை கற்றுக் கொண்டேன்.

அதை இந்த பதிவின் மூலம் நாலு பேருக்கு தெரிய செய்தால் பலருக்கு உதவியாக இருக்குமே என்பதற்காக பகீரங்கமாக எழுத விரும்புகிறேன்.  சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வலம்புரி காய், இடம்புரிகாய், தான்றிகாய், கடுக்காய், ஆகாய தாமரை, வெட்டி வேர், சாரனை வேர், அகில் கட்டை, சந்தன கட்டை, தேவதாறு கட்டை போன்றவைகளை வாங்கி கற்பூரத்தில் வைத்து எரித்து சாம்பலாக்க வேண்டும்.

   அந்த சாம்பலை பயிறுகள் திரிக்கும் கல் எந்திரத்தில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.  பின்னர் பட்டுப் போல் சலித்து சுத்தமான நல்லெண்ணையில் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி காலை வெய்யிலில் உலர்த்த வேண்டும்.  அப்படி உலர்த்திய பிறகு அந்த உருண்டைகளை மீண்டும் கற்பூரத்தில் எரித்து சாம்பலாக்கி வெண்கல கிண்ணத்தில் சேமித்து  கொள்ள வேண்டும்.

அந்த வெண்கல கிண்ணத்தை பூஜையறையில் விநாயகருக்கு முன்பு வைத்து ஓம் கங் கணபதியே நமஹ என்ற மூல மந்திரத்தை காலை வேளையில் 1008 முறை ஜெபிக்க வேண்டும்.  இப்படி தொடர்ச்சியாக 45 நாள் ஜெபித்து மந்திரத்தை உரு ஏற்ற வேண்டும்.  இந்த மந்திர உருவேற்று நடக்கும் நாளில் கண்டிப்பாக மாமிச போஜனம் கூடாது.  பிரம்மசரியத்தை வலுவாக கடைபிடிக்க வேண்டும்.  இந்த விஷயத்தில் நீக்கு போக்காக நடந்து கொண்டால் நிச்சயம் பலன் இருக்காது.  மேலும் ஜனன மரண தீட்டுக்களை தவிர்க்க வேண்டும்.  நாப்பத்தைந்து நாள் உருவேற்றிய பிறகு வெண்கல கிண்ணத்தில் இருக்கும் மூலிகை சாம்பலை சுத்தமான பசு நெய், சந்தன எண்ணெய் முதலியவற்றில் கலந்து மை போல அரைக்க வேண்டும்.  அப்படி அரைக்கும் போது ஓம் யங் சங் கீலிம் கும்பட் ஸ்வாஹ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே அரைக்க வேண்டும்.

அப்படி அரைத்த முடித்த பிறகு சாம்பலை வழித்து எடுத்து வெண்கல கிண்ணத்தில் வைத்துக் கொண்டு பூத வேதாள உப்பு, கன எருமை விருச்ச பால், மதிமயக்கிவேர் போன்றவற்றை கலந்து ஒரு வெண்கல தட்டு எடுத்து கிண்ணத்தை காற்று புகாமல் மூடி வாழை மரத்து அடியில் புதைத்து விட வேண்டும். 45 நாள் அது புதைக்கப்பட வேண்டும். அந்த நாளில் வாழை மரத்திற்கு கொடுக்கும் தண்ணீரில் சற்று மஞ்சள் கலக்க வேண்டும்.


 45 நாட்களுக்கு பிறகு அதை வெளியில் எடுத்து குரு மூலமாக பெற்ற மூல மந்திரத்தை 25நாட்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் உருயேற்றி மீண்டும் பசும்நெய் விட்டு குப்பியில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும். இது நம் கையில் இருந்தாலே தொழில் ரீதியான அயல்நாட்டு பயணம் நம்மை தேடி வரும். தடங்கல் இருந்தால் தானாக விலகும் இது மட்டும் அல்ல அயல்நாடு செல்லாமல் உள்ளுரில் தொழில் நடத்துபவர்கள் கூட இந்த அஞ்சனத்தை பயன் படுத்தி நிறைய செல்வ வளத்தை பெறலாம்

இந்த விஷயத்தை நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் கூட நடக்குமா? இது சாத்தியமா? என்று தோன்றும். இந்த சந்தேகங்கள் ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஆனால் இதை சில பேருக்கு செய்து கொடுத்த பிறகு அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நமது முன்னோர்கள் இப்படி பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவைகளை உண்மையன்று நிருபிபதற்கு அனுபவங்களை தவிர வேறு ஆதாரங்கள் இல்லை.



 முகவரி
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434



Contact Form

Name

Email *

Message *