Store
  Store
  Store
  Store
  Store
  Store

எடு வேப்பிலையை! அடி பேயை!!


   பேய் ஓட்டும் இடங்கள் பலவற்றிக்கு நாம் சென்று இருக்கிறோம் அங்கே பேய்களை ஓட்ட மந்திரவாதிகள் வேப்பிலையை பயன்படுத்துவார்கள் ஏன் வேப்பிலையே பயன்படுத்துகிறார்கள் வேறு எதாவது இலைகளை பயன்படுத்தலாமே என்று நமக்கு தோன்றும்

வேப்பிலையை பயன்படுத்தி பேய்களை ஓட்டும் பழக்கம் நம் நாட்டில் மட்டும் அல்ல சில ஆப்பிரிக்கா நாடுகளிலும் இருக்கிறது.

  ஆனால் பெருவாரியான ஆப்பிரிக்க நாடுகளில் வேப்பிலைக்கு பதிலாக வேறு சில இலைகளையும் உபயோக படுத்துகிறார்கள்.


   பேய் ஓட்டுவதற்கு இலைகளை பயன்படுத்தும் விஷயம் இருக்கட்டும்.

  முதலில் மனிதர்களை ஏன் பேய்கள் பிடிக்கின்றன என்பதை பார்ப்போம்.

  இன்று இந்து மத கோவில்களில் மட்டுமல்ல தர்க்காகளிலும், ஜெப கூட்டங்களிலும், கத்தோலிக்க தேவாலயங்களிலும் பேய்கள் ஓட்டப்படுகின்றன.

  நான் பிறந்த ஊருக்கு பக்கத்தில் உவரி என்ற ஊர் இருக்கிறது.  அங்கு கடற்கரையோரமாக கீழ்பகுதி கப்பல் போலவும் அதன் மேலே விமானம் இறங்கி நிற்பது போலவும் ஒரு மாதா கோயில் உள்ளது.

  அருகிலேயே மிக பழமையான அந்தோனியார் தேவாலயமும் இருக்கிறது.

 இந்த தேவாலயத்தில் செவ்வாய் கிழமை தோறும் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

  அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் மத பாகுபாடு இல்லாமல் திருப்பலியில் கலந்து கொள்வார்கள்.  


   பூஜை முடிந்ததும் பாதிரியாரால் மந்திரிக்கப்பட்ட புனித தைலம் என்ற தேங்காய் எண்ணெய் சிறிய பாட்டில்களில் தருவார்கள்.

 அதை பெறும் மக்கள் பேய் பிடித்ததாக கருதப்படுபவர்களின் கண்களில் எண்ணெயை ஊற்றுவார்கள்.

  சிறிது நேரத்தில் எண்ணையை ஊற்றப்பட்டவர்களில் பலர் உட்கார்ந்த நிலையிலேயே முன்னும் பின்னும் ஆட ஆரம்பிப்பார்கள்.

 நேரம் செல்ல செல்ல ஆட்டத்தின் வேகம் அதிகரிக்கும்.

 ஆடுபவர்களில் முக்கால் வாசி பேர் பெண்களாக தான் இருப்பார்கள்.

 ஒரு நீளமான கயிற்றில் கல்லை கட்டிக் கொண்டு சுற்றினால் எப்படி வீர்வீரென சத்தம் வருமோ அப்படி தலை சுற்றுகின்ற வேகத்தில் அவர்கள் நீளமான தலைமுடியும் சுற்றி வரும்.


  இரவு நேரத்தில் பேரிறைச்சல் போடும் கடற்கரையோரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தலைவிரி கோலமாக ஆடுவதை பார்ப்பதே திகிலான அனுபவமாக இருக்கும்.

  நேரம் நடுநிசியை தொடும் போது ஆட்டம் திடீரென நிற்கும்.

  ஆலய மணி நிசப்தத்தை கிழித்து கொண்டு பேரோசையோடு ஒலிக்கும்.

   இப்படி எத்தனையோ காட்சிகள் நமது நாடெங்கும் காண முடியும்.

 ஆனால் உண்மையிலேயே ஆடுபவர்கள் அனைவருக்கும் பேய் பிடித்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

  நமது யோக சாஸ்திரங்கள் ஒரு மனிதனின் உடலில் அமானுஸ்ய சக்தி புகுந்தால் அது பத்து முதல் பதினைந்து நிமிடம் வரையே உடலுக்குள் தங்க முடியுமென சொல்கிறது.


   மணிகணக்கில் பேய் ஆடுவதும், சாமியாடுவதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயமாகும்.

  இவைகளை ஒருவித மனநோய் என்றே சொல்லலாம்.

  பேய் பிடித்திருப்பதாக சொல்லப்படும் நபர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கே உண்மையான பேய் பிடிக்க வாய்ப்புள்ளது. 

  காரணம் மனித உடம்பில் இருக்கும் எஸ்டோபிளாசம் என்ற ரசாயணம் அதிகமாக இருந்தால் தெய்வீக சக்திகளும், குறைவாகயிருந்தால் தீய சக்திகளும் அண்டும்.  சமமாக இருந்தால் எந்த சக்தியும் அண்டாது.

  பலருக்கு சமமாகவேயிருக்கும்.  மனைவியின் மேல் உள்ள கோபம், மாமியார் மற்றும் கணவன் மேல் உள்ள அதிருப்தி, பெற்றோர்களிடத்திலுள்ள பயம், படிப்பு மற்றும் வேலையின் மீதுள்ள வெறுப்பு போன்றவைகளே பலரை பேய்பிடித்தல் என்ற மன வியாதியில் தள்ளுகிறது.

  இந்த மன வியாதிக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுத்தால் தற்காலிக நிவாரணம் பெறலாம்.

  வேப்பிலை ஒரே சீராக மீண்டும் மீண்டும் நோயாளிகளின் தலையில் அடிக்கும் போது மிதமான மின் அதிர்வு ஏற்பட்டு மனதுக்கு இதம் அளிக்கிறது

.  இந்த மின்சார ரகசியம் பூசாரிக்கும் தெரியாது, நோயாளிக்கும் தெரியாது.

 இப்படி தெரியாமலேயே பல நூறு வருடங்களாக பேய் ஓட்டுவதற்கு வேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

 ஆரோக்கியம் தரும் விஷயம் இது என்பதனால் பாராட்டினால் தவறில்லை. 




 

Contact Form

Name

Email *

Message *