Store
  Store
  Store
  Store
  Store
  Store

கழுகும் நரியும் நமது தலைவர்கள்...!


   ஹாபாரத போரில் ஒரு காட்சி அம்பு படுக்கையில் பீஷ்மர் கிடக்கிறார் தர்மராஜன் அவரிடம் உபதேசம் பெற மண்டியிட்டு நிற்கிறான்

பிதாமகரே பிறக்கப் போகும் கலியுகத்தில் நாடுகளை ஆளும் அரசியல் தலைவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவன் கேட்க பிதாமகர் பீஷ்மர் பதில் சொல்கிறார்

ஒரு குடியானவன் இருந்தான் அயராது உழைப்பதில் வல்லவன் அவன் அதனால் அவனிடம் வறுமை இல்லை உடலில் வளமை குன்றவில்லை

ஆனாலும் அவன் மனதில் ஆரத குறை ஒன்று இருந்தது அது தனக்கு குழந்தை இல்லையே என்ற குறை 


பார்க்காத வைத்தியம் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமலே தொடர்ந்தது

தான தர்மங்கள் செய்தான் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை போனான் எப்படியோ அவன் மனைவி கர்ப்பவதியானாள்

குடியானவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை காய்ந்து போன களர் நிலம் மழைத்துளிக்காக காத்திருப்பது போல் பத்து மாதத்தில் குழந்தை வந்து பிறக்க ஆவலோடு காத்திருந்தான்

குழந்தையும் பிறந்ததது தாயும் தந்தையும் தெய்வ லோகமே தங்களுக்கு கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்த கூத்தாடினர்

கண்ணும் கருத்துமாய் குழந்தையை வளர்த்தனர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் குழந்தை வளர்ந்து சிரித்தது


அதன் சிரிப்பில் மயங்கியது பெற்றோர் மட்டும் அல்ல உற்றாரும் ஊராரும் கூடத்தான்

தனது மழலை விளையாட்டுகளால் எல்லோரையும் கவர்ந்த குழந்தை எமதர்மனையும் கவர்ந்தது போலும் ஒரே நாள் நோயில் மரண தேவனின் காலடியில் போய் விழுந்தது

பெற்ற வயிறு பற்றி எரியாதா என்ன! காத்திருந்து பெற்ற பிள்ளை கண் மூடி திறக்கும் நேரத்திற்குள் இல்லாமல் போய் விட்டால் யாரால் தான் தாங்க முடியும்!

கதறி அழுதார்கள் முட்டி மோதினார்கள் வயிற்றில் அறைந்து கொண்டு திறந்த வாய் மூடாமல் மூச்சற்று மயங்கி விழுந்தார்கள்

எப்படி அழுது புலம்பினாலும் போன உயிர் போனது தானே திரும்பி வரவா போகிறது?

 மார் மேலும் தோள் மேலும் போட்டு வளர்த்த பிள்ளையை மயானத்தில் போட்டு விட தகப்பன் போனான்

மயானத்தின் வாசலில் அவன் காலடி வைக்கவும் அங்கே இருந்த கழுகு ஒன்று அவனிடம் பேசியது

ஐயோ எத்தனை பாடு பட்டு இந்த பிள்ளையை பெற்றாய் கண் தூங்காமல் விழித்திருந்து வளர்த்தாயே இறக்கமே இல்லாத காலதேவன் இப்படி மோசம் செய்து உன்னை அனாதை ஆக்கி விட்டானே

நீ படும் துயரத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை ஆனாலும் இக்கட்டான காலத்தில் அறிவுரை சொல்வது தான் என் வழக்கம்

நீ பாலும் தேனும் கொடுத்து வளர்த்த குழந்தையை மண்ணில் புதைத்து விட்டு போகாதே! நாயும் நரியும் குழியை தோண்டி குழந்தையை குதறி தின்று விடும்

எட்டாத உயரத்தில் மரக்கிளையின் உச்சியில் போட்டு விட்டு போ எந்த நரியும் தீண்டாது என்று சொன்னதாம்

சோகத்தில் இருப்பவனுக்கு ஆராயும் புத்தியா வேலை செய்யும்? கழுகு சொன்னதை அப்படியே செயலாக்க போனானாம் 


அதை கண்ட நரி தடுத்து நிருத்தியதாம் என்ன காரியம் செய்ய துணிந்தாய் நீ ஆழமாக புதைத்தால் யாரால் தோண்ட முடியும்

எனவே கழுகு சொன்னது போல் மரத்தில் மேல் போடாமல் மண்ணில் புதை மாறாக மரத்தில் போட்டால் உன் பிஞ்சி குழந்தையின் பஞ்சு மேனியை கழுகு கூட்டம் தான் கொத்தி தின்றும் என்றதாம்

குழந்தையை பற்றிய கவலை நரிக்கும் இல்லை கழுகுக்கும் இல்லை அவைகளுக்கு தாங்கள் அடைய வேண்டிய உணவை பற்றிய கவலை தான் இருந்தது அதற்காக தான் தர்மம் போலவே சுயநலத்தை பேசியது

இந்த கழுகு நரியை போல தான் கலியுகத்தில் அரசு தலைவர்கள் இருப்பார்கள் அவர்கள் பேசுவது மக்கள் நலன் போலவே தெரிந்தாலும் சொந்த நலம் தான் எல்லா செயலிலும் சொல்லிலும் மறைந்திருக்கும்

ஆளப் படுகின்ற மக்களை பற்றி அக்கறை என்பது இருக்கவே இருக்காது என்று பீஷ்மர் சொன்னாராம்


இது கதையா கற்பனையா என்ற ஆராய்சி தேவை இல்லை இது எப்படி பட்ட தீர்க்க தரிசனம் என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்

இன்று நம்மை ஆள்பவர்கள் நரியாகவும் நேற்று நம்மை ஆண்டவர்கள் கழுகாகவும் இருப்பதை அனுபவத்தில் கண்டு விட்டோம்

இந்தியாவில் மட்டும் அல்ல உலக முழுவதுமே ஆளும் வர்க்கம் இப்படி தான் இருக்கிறது

நான் மீசை முளைத்த பருவத்தில் ரஷ்யாவை போல் நல்ல தலைவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நம் நாட்டில் யாருமே இல்லையே என்று வருத்தப் பட்டதுண்டு

காலம் போக போக விவரம் தெரிய தெரிய ரஷ்யாவில் நலமுடன் வாழ்வது கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகள் தான் மக்கள் அல்ல என்ற உண்மை தெரிந்தது

அதன் பிறகு அமெரிக்கா தான் ஜனநாயகத்தையும் மக்கள் நலத்தையும் காக்கும் காவலன் என்று நம்பினேன்

என் அப்பாவி தனம் கரைந்த பிறகு தான் அமெரிக்காவின் கோர முகம் தெரிந்தது

சென்னையில் ஐந்து நட்ச்சத்திர விடுதி ஒன்றில் மக்கள் மேலாண்மையை பற்றி உரையாற்ற சென்றிருந்தேன் 


அங்கே அமெரிக்காவில் சேரி குழந்தைகளுக்கு இலவசமாக பாட போதனை செய்யும் இந்திய இளைஞன் ஒருவனை சந்தித்தேன்

அவன் தான் அமெரிக்க வறுமை நிறத்தை பக்கம் பக்கமாக எனக்கு விவரித்தான்

பணம் படைத்தவன் பணம் இல்லாதவனை அடிமையாக நடத்துகின்ற கொடுமைகளையும் கருப்பின மக்கள் இன்று வரை அனுபவித்து வரும் வேதனைகளையும் விரிவாக எடுத்து சொன்னான்

அப்போது தான் என் தாய் திருநாட்டின் மகத்துவம் என்னவென்று எனக்கு தெளிவாக தெரிந்தது

நம் தலைவர்கள் கொடியவர்கலாக கோரமே வடிவானவர்கலாக இருக்கலாம் ஆனால் நம் மக்கள் இன்னும் அப்படி ஆக வில்லை

அவர்கள் மனதில் வறுமையை கண்டு இல்லாமையை கண்டு அதை ஏளனம் செய்யக் கூடாது முடிந்தால் ஒழிக்க வேண்டும் என்ற ஈரமான எண்ணம் இன்னும் பசுமையாக இருப்பதை உணர்ந்தேன்

எப்படியும் என் நாடு வலிமை பெற்ற பாரதமாக எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது

அதன் அறிகுறியாக தான் நாடு முழுவதும் ஊழலை பற்றியும் கருப்பு பணத்தை பற்றியும் வறுமையை பற்றியும் ஒரு விழிப்புணர்வு நிலை பரவலாக எல்லாத்தரப்பு மக்கள் மனதிலும் உருவாகி வருவதை காண்கிறேன் 

 நமது அரசியல்வாதிகள் எந்த காலத்திலும் அனுபவிக்காத பய உணர்ச்சியை இந்த காலத்தில் இப்போது அனுபவிப்பதாக நான் சிறிது உணருகிறேன்

மக்கள் முன்பு போல் ஊழல் செய்தவர்களை மன்னிக்கவோ மறக்கவோ தயாராக இல்லை தண்டிக்க தயாராகி விட்டார்கள் என்ற எண்ணம் அரசியல்வாதிகள் இடத்தில் பரவலாக இருப்பதை காண முடிகிறது

நிச்சயம் சிறிய நெருப்பு பொறி இந்தியர்கள் மனதில் புகைய ஆரம்பித்து விட்டது அது வெகு விரைவில் பரவும் என்பதில் ஐயம் இல்லை

ஆனால் வல்லரசு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவில் நடப்பதை பாருங்கள்

கனவான்களுக்கும் பணக்கார முதலாளிகளுக்கும் கொடுக்கும் சலுகையை நிறுத்தாமல் சாதாரண மக்களுக்கு கொடுத்துவரும் சலுகைகளை படிப்படியாக குறைக்கப் போகிறார்களாம்

இது விபரிதமான விளையாட்டு என்பதை வருங்கால அமெரிக்க சரித்திரம் நிச்சயம் காட்டும்

இது வரை அந்த நாடு மற்ற தேசங்களை தான் சுரண்டி வாழ்ந்தது இப்போது தான் முதல் முறையாக தன் சொந்த மக்களையே வறுமை பள்ளத்தில் தள்ளி மண் போட்டு மூட முயற்சி செய்கிறது

இது நாளடைவில் வளருமானால் அமெரிக்க தேசம் தனது வல்லாண்மையை இழக்க நேரிடும்

எந்த தேசமாக இருந்தாலும் அது எத்தனை வலிமை பெற்றதாக இருந்தாலும் அதன் ஆதாரம் என்பது மக்கள் சக்தி தான்

அந்த சக்தியை வீணடிக்கும் எவரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை

அந்த சரித்திரம் தொடர்ந்தால் மஹாபாரதத்தில் கெளரவர்களுக்கு ஏற்பட்ட கதி தான் எவருக்கும் ஏற்ப்படும்

Contact Form

Name

Email *

Message *